மனிதன்!



படித்தது இன்ஜினீயரிங். பார்த்தது அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட்டில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலை. சம்பளம் மூன்று வருடத்திற்கு முன் மாதம் நான்கு லட்சம்...

பேங்கில் பேலன்ஸ் கோடிகளை நெருங்கும்போது மனதில் சின்ன குறுகுறுப்பு. பட்டென வேலையை விட்டார். திருச்சிக்குத் திரும்பினார் செந்தில்குமார்.

"உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிட்டு!" என்று உறவுக்காரர்கள் முதல், நண்பர்கள் வரை பலரும் ஆலோசனைகளையும், ஆற்றாமையையும் அள்ளிக்கொட்ட, எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கிராமம் கிராமமாக சைக்கிளில் அலைந்திருக்கிறார் செந்தில்குமார். இறுதியாக தேனூரில் தன் வாழ்க்கையை செட்டிலாக்க முடிவு செய்தார்.

விவசாயம், வேலை, சாலை என சகலத்திலும் பின்தங்கிய ஒரு குக்கிராமத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர் செட்டிலாகி சாதிக்க என்ன இருக்கும்?

முதல்கட்டமாக சின்னதாக ஒரு மருத்துவமனை, ஒரு கம்ப்யூட்டர் சென்டர். சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு மரத்தடி பாடசாலை என தன் கைக்காசை செலவழித்து காரியங்களில் இவர் இறங்க, இன்று ஒட்டுமொத்த கிராமமும் செந்தில்குமாரை `எங்க ஊர் சிவாஜி!' என்கின்றனர்.

பிறந்தது திருச்சி அருகே உள்ள திண்ணனூர் கிராமம் என்றாலும், தேனூரை தேர்ந்தெடுத்து அந்த கிராமத்தை மேம்படுத்த தன் சேமிப்பில் இருந்து இதுவரை நாற்பது லட்ச ரூபாயை செலவழித்திருக்கும் இந்த லட்சிய மனிதரை நேரில் சந்தித்தோம்.

வேஷ்டி-சட்டை. அதுவும் மலிவாக. கஞ்சிபோட்டு விறைப்பாக இல்லாமல் குழைவாக... கேரியர் வைத்த சைக்கிள். ஹாண்டில் பாரில் சாப்பாட்டுத் தூக்குப் பாத்திரம். கேரியரில் மஞ்சள் பையில் லேப்டாப். ஒட்ட வெட்டிய முடி. ஒழுங்கு படுத்தாத மீசை, தாடி என தானும் ஒரு கிராமத்து மனிதராகவே மாறியிருந்தார் செந்தில்குமார்.

``நான் மாறவில்லை. எப்பொழுதுமே இப்படித்தான்'' என்றவர் தன்னைப்பற்றிச் சொல்லத் துவங்கினார்.

``அப்பா கோபாலன். சர்க்கரை ஆலையில் வேலை பார்த்தவர். அம்மா லீலா. அண்ணன் டாக்டர், இலண்டனில். அக்கா திருமணமாகி சென்னையில். நான் கிராமங்களுக்கு சேவை செய்யப்போறேன்னு தேனூருக்கு வந்திட்டேன்.

2005 ஜனவரி 24-ல் வேலையை ஆரம்பிச்சேன். இன்னைக்கு நாலு வருஷம் ஆகப் போகுது. பாதி நிறைவேறி இருக்கு!

கிராமங்களில் அடிப்படையான மருத்துவ வசதி இல்லாமல் எத்தனையோ பேர் தெனந்தெனம் சாகிறாங்க. அப்படி ஒரு கிராமமாகத்தான் தேனூரும் இருந்துச்சு. அதனால் முதலில் ஒரு மருத்துவமனையைக் கட்டினேன்.

அப்புறம் பள்ளிக்கூடம்.

கல்விக்கூடத்தை இயந்திரமயமாக்காமல் யதார்த்த அணுகுமுறையை கடைப்பிடிக்கிறோம். முதலில் உலக வரலாறு படிக்கணும்னு அவசியமில்லை. உங்களைச் சுத்தி இருக்கிற கிராமங்களைப் பற்றியும், அந்த ஊர்களோட சிறப்புகளையும் தெரிஞ்சுக்கிடணும். இதுதான் எங்க பாட முறை.


கிராமங்களில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தணும். அதுக்காக தொழிற்கல்வியை தொடங்கினோம். மண்புழு உரம், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், திருப்பூர் வேஸ்ட் பனியன்களை வரவச்சு அதை நூலாக பிரித்துக்கொடுப்பது, சமுதாயக்கூடம் கட்டுவதென பல்வேறு வழிகளில் வேலை வாய்ப்பை இந்த கிராமத்தில் அதிகப்படுத்தி இருக்கோம். இயற்கை வேளாண்மையை செய்கிறோம். எண்ணெயும் எடுக்கிறோம். இதுவரை 3000 மரங்கள் நட்டிருக்கோம்.

இதெல்லாம் சாதாரண விஷயந்தான். மனசுக்குப் பிடிச்சிருக்கு. அதனால சுமையாத் தெரியல. கிராமத்துக்கு நல்லது செய்யணும்ங்கிற விஷயம் மட்டுந் தான் கடமையாத் தெரியுது. இப்ப நான் செய்யற விஷயம்... ரொம்ப நாளா என் மனசுல ஊறுன விஷயம்.

நான் ஆரம்பித்த இந்த வேலையில் இப்பொழுது என் கல்லூரி, சாஃப்ட்வேர் நண்பர்கள் உதவி பண்ண ஆரம்பிச்சிருக்காங்க.

இனி எங்களுக்குத் தேவை என்னவென்றால், அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவ நிபுணர்கள், கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், செவிலியர் எல்லாம் வாரம் ஒரு நாளோ, மாதம் இரு நாளோ கொஞ்சம் வந்து போனால் போதும். இந்த கிராமங்களின் வளர்ச்சியில் இன்னும் வேகம் கூடும். இப்போதைக்கு இதுதான் எனக்கு தேவை'' என்று பிரமிப்பூட்டுகிறார் செந்தில்குமார்.

செந்தில்குமாரின் தாய் லீலாவோ, ``சீக்கிரம் இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணுங்கிறதுதான் எங்களோட ஆசை. ஆனால், சம்பாதித்த காசை சேவைன்னு செலவு பண்ற பிள்ளைக்கு யார் பொண்ணு தர்றாங்க... அதுவுமில்லாம `உங்க புள்ளை நல்லாப் படிச்சுட்டு, நல்லா சம்பாதிக்கிறப்பவே ஏன் இப்படி ஆயிட்டார்'னு அபத்தமா பேசுறதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்குதுங்க!'' என்று வேதனையோடு கண்கலங்கினார்..



நன்றி: குமுதம்

குழந்தைகளை கடத்தும் வெள்ளையின மேலாண்மை

உலகப் புகழ் பெற்ற பாடகி மடோனா, ஆப்பிரிக்காவில் மாலாவி நாட்டு குழந்தை ஒன்றை தத்தெடுத்த சம்பவம் சர்வதேச ஊடக கவனத்தை பெற்றது. அதைப்பார்த்த மக்களும், மேல்நாட்டு தர்மவான்களின் காருண்யத்தை மெச்சினர். அதேநேரம் சாட் நாட்டிலிருந்து விமானம் மூலம் குழந்தைகளை கடத்த முயன்று பிடிபட்ட, "Zoë's Ark" என்ற தொண்டர் நிறுவனத்தை சேர்ந்த சில உறுப்பினர்கள், அவர்கள் வாடகைக்கு அமர்த்திய விமானத்தின் ஓட்டி, இரு பத்திரிகையாளர்கள் ஆகியோர் சாட் அரசினால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட சம்பவம் அதேயளவு பேசப்படவில்லை. அந்த தொண்டர் நிறுவன ஊழியர்கள், தாம் அயல்நாடான சூடானில் யுத்தம் நடைபெறும் டார்பூர் பிரதேச அநாதை குழந்தைகளையே, ஐரோப்பிய பெற்றோருக்கு தத்து கொடுக்கும் நல்லெண்ண நோக்குடன் கூட்டிச் சென்றதாக கதை அளந்தனர். ஆனால் அந்தக் குழந்தைகள் சாட் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும்,அவர்கள் அனாதைகளல்ல, பெற்றோர் இருக்கின்றனர் என்பதும், மேற்படி தொண்டர் நிறுவன ஊழியர்களால் கடத்தப்பட்டனர், என்ற உண்மை பின்னர் நிரூபணமானது.

இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர், ஐரோப்பிய சனத்தொகை குறைந்தாலும், வசதிபடைத்தோர் பெருகியதாலும், அல்லது "வறிய நாடுகளில் இருக்கும் ஏழைகளுக்கு உதவும் கொள்கை" காரணமாகவும் பலர் குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்க ஆரம்பித்தனர். மேலைத்தேய அரசுகள் தத்து எடுக்கும் சட்டங்களை கடுமையாக வைத்திருக்கின்றன. தத்து எடுப்பதற்கு குழந்தைகளை பெற்றுக்கொடுக்கும் முகவர் நிலையங்கள் கண்டிப்பான சோதனைக்கு உள்ளாக வேண்டும். வறிய நாடொன்றில் அநாதை ஆச்சிரமங்களுக்கு அதிகபட்ச நன்கொடை அளிப்பது தடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தத்து எடுக்கும் தொண்டர் நிறுவனங்கள், இதனை லாபம் கொழிக்கும் தொழிற்துறையாக வளர்த்து விட்டுள்ளன.

Unicef அறிக்கை ஒன்றின் படி, தத்து கொடுக்கப்படும் ஒவ்வொரு குழந்தைக்கும், 50 பெற்றோர் தத்து எடுக்க காத்திருக்கின்றனர். பணக்கார நாடுகள் சிலவற்றில் இந்த காத்திருக்கும் பட்டியலில் சராசரி 4000 பெற்றோர் உள்ளனர். சில நேரம் அவர்கள் 10 வருடங்களாவது ஒரு குழந்தைக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த நிலைமை தத்து எடுக்கும் தொழிற்துறை என்ற லாபகர வணிகத்திற்கு விளைநிலமாக உள்ளது. அரசுசாரா தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற போர்வையின் கீழ் இயங்கி வரும், இந்த வணிக நிறுவனங்கள் (உதாரணம்: Foster Parents), ஏழை நாட்டு குழந்தைகளை வாங்கி, பணக்கார நாடுகளில் விற்று அதிக லாபம் சம்பாதிக்கின்றன.

இந்த நிறுவனங்கள், தத்து எடுக்க இருக்கும் தம்பதியினரிடம் $ 5000 தொடக்கம் $ 30000 வரை வசூலிக்கின்றன. இந்த தொகையில் ஒரு பகுதி குழந்தையை வாங்கிக் கொடுக்கும் உள்ளூர் முகவர், சட்ட ஆவணங்களை தயாரிக்கும் வக்கீல் ஆகியோருக்கு செல்கின்றது. உதாரணத்திற்கு ஆனால் குழந்தையை தத்து கொடுக்கும் பெற்றோருக்கு, மிக மிக சிறிய தொகை($600) மட்டுமே செல்கின்றது. சில நேரம் அதுவும் இல்லை. குடும்ப பாரத்தை சுமக்க முடியாத ஏழைப் பெற்றோர், தமது பிள்ளை எங்கேயாவது சென்று நன்றாக வாழ்தல் சரி, என திருப்திப்படுகின்றனர்.

இந்தியா உலகநாடுகளுக்கு குழந்தை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதலிடம் வகிக்கின்றது. வருடந்தோறும் சராசரி ஒரு லட்சம் இந்தியக் குழந்தைகள், பணக்கார நாடுகளில் விற்கப்படுவதன் மூலம் அந்நாட்டிற்கு 10 கோடி டாலர்கள் அந்நிய செலாவணியாக கிடைக்கின்றது. இந்தியாவில், அரசால் தீர்மானிக்கப்பட்ட தொகையான $ 3000 ற்கும் அதிகமாகவே அங்குள்ள அநாதை ஆச்சிரமங்களுக்கு வழங்கப்படுகின்றது. தொண்டர் நிறுவனங்கள் மட்டுமல்ல, பணக்கார நாட்டு அரசுகள் கூட, இந்த தொழிற்துறையில் அதிக கட்டுப்பாடுகள் போட விடுவதில்லை.

அவை தத்து கொடுக்கு ஏழை நாடுகள் மீது அழுத்தம் பிரயோகிக்கின்றன. அநாதை இல்லத்தில் இருக்கும் குழந்தை ஒன்றை, 6 மாதங்களுக்கு யாரும் வந்து பார்க்கா விட்டால், அதனை அனாதைக் குழந்தை என்று தீர்மானித்து சட்டபூர்வமாக தத்து கொடுக்கும் படி அமெரிக்கா வற்புறுத்தி வருகின்றது. இதனால் வளர்முக நாடுகளின் ஏழைப் பெற்றோர் தமது பிள்ளைகளை அநாதை இல்லத்தில் விடும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர். ஏழை நாட்டு அரசாங்கங்கள் வறுமை ஒழிப்பு திட்டங்களில் முதலிடுவதை கைவிட்டு விட்டு, தமது நாட்டு ஏழைக் குழந்தைகளை பிடித்து கடத்தும் ஈனத்தனமான வேலைகளில் இறங்குகின்றன.

"தத்து எடுப்பது ஒரு தர்ம காரியம்" என்ற மாயை இன்னும் அகலவில்லை. பெரும்பாலும் ஏழை-பணக்கார நாடுகளின் உறவுகளில் இன்னொரு முரண்பாடாக "தத்து எடுக்கும் நற்பணி" உள்ளது. பெரும்பாலும் இனவாத சக்திகள் இதனால் பலம்பெருகின்றன. ஆசியா அல்லது ஆப்பிரிக்காவை சேர்ந்த, ஒரு குறிப்பிட்ட வளர்ந்து வரும் நாடொன்றில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த குழந்தை, தனது பிறந்த இடத்தில் இருந்து முற்றிலும் அந்நியப்பட்ட சூழலில் வளர்கின்றது. பணக்கார நாடொன்றில், வெள்ளையின பெற்றோரால் வளர்க்கப்படும் அந்தக் குழந்தை, வளர்ப்புப் பெற்றோரின் உலகப்பார்வையை பெற்றுக் கொள்கின்றது. அந்தப் பார்வை பெரும்பாலும் வெள்ளையின மேலாதிக்கம் சம்பந்தப்பட்டது,என்பதை நான் இங்கே குறிப்பிடத்தேவையில்லை.

ஏழை நாடுகள் வளர முடியாது சபிக்கப்பட்டவை, பணக்கார நாடுகள் அதற்குமாறாக கடவுளின் அனுக்கிரகம் பெற்றவை, என்பன போன்ற இனவாதக் கருத்துகள் பிஞ்சுமனதில் விதைக்கப்படுகின்றன. கருப்புத்தோல் கொண்டிருந்தாலும், வெள்ளயினத்தவரை போல சிந்திக்கின்றனர். ஏழை நாடுகளை கண்டால் அருவருக்கும் போக்கை, பல தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் பெற்றுக்கொள்கின்றனர். இந்த இனவாத தத்தெடுக்கும் நடைமுறைக்கு அவுஸ்திரேலியா முன்னோடியாக விளங்கியது. அங்கே லட்சக்கணக்கான கருமைநிற அபோர்ஜின குழந்தைகள், அவர்களது பெற்றோரிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்டனர். அந்தப் பிள்ளைகள், வெள்ளையின கிறிஸ்தவ சபைகளால், ஐரோப்பிய கலாச்சார அடிப்படையில் வளர்க்கப்பட்டனர். "திருடப்பட்ட தலைமுறை" என்றழைக்கப்படும் அந்த வன்செயல், நாகரீக உலகால் நிராகரிக்கப்படுகின்றது. ஆனால் தத்து எடுத்து வளர்ப்பது என்ற, "பிள்ளை பிடிக்கும் வணிக நிறுவனங்களின்" செயல், இன்றும் கூட தர்மகாரியமாக கருதப்படும் வேடிக்கையை பார்க்கலாம்.

சில தகவல்கள்

இன்று முதல்